காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்ம சாவு

தியாகதுருகம் அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-24 18:45 GMT

தியாகதுருகம், 

தியாகதுருகம் அருகே வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசன் (வயது 31). இவரும் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் பானுப்பிரியா (29) என்பவரும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மணியரசன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பானுப்பிரியா வீட்டில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்த பானுப்பிரியாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பானுப்பிரியாவின் தந்தை பாலசுப்பிரமணியன் தியாகதுருகம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் மணியரசன் மற்றும் அவரது தாய் இந்திரா, மணியரசனின் அண்ணி சரண்யா ஆகியோர் வரதட்சணை கேட்டு எனது பெண்ணை கொடுமை படுத்தி வந்தனர். இந்த நிலையில் எனது மகள் இறந்து விட்டார். எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளதால், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பானுப்பிரியா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் இறந்ததால், இது பற்றி கோட்டாட்சியர் பவித்ரா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்