முதியவர் அடித்துக்கொலை

ஒரத்தநாடு அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2023-10-15 20:43 GMT

ஒரத்தநாடு:

தகராறு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள குலமங்கலம் ஜவுளி தெருவை சேர்ந்தவர் கைலாசம் (வயது72), இவர் நேற்று காலை அதே பகுதியில் உள்ள சடையன் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமனின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெயராமனுக்கும், கைலாசத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அடித்துக்கொலை

அப்போது ஆத்திரமடைந்த ஜெயராமன், கைலாசத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி கீழே விழுந்த கைலாசத்தை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் கைலாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.

விவசாயிக்கு வலைவீச்சு

இதுகுறித்து கைலாசத்தின் மகள் கோமதி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது தந்தை கைலாசத்தை, விவசாயி ஜெயராமன் அடித்துக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார், ஜெயராமன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்