நாகர்கோவிலில்வீட்டில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

நாகர்கோவிலில் வீட்டில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

Update: 2023-06-16 17:32 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வீட்டில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

துர்நாற்றம் வீசியது

நெல்லை மாவட்டம் கன்னன்குளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 75). இவருடைய மகன் பிரபு (40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வாடகை காரை ஓட்டி வந்தார். தற்போது இவர் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியபடி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். அதே சமயத்தில் பிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அந்த வீட்டில் அவர் தனியாக இருந்தார்.

இந்தநிலையில் பிரபு வசித்த வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களாக துர்நாற்றம் வீசியது. மேலும் வீடும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அழுகிய நிலையில் உடல் மீட்பு

தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு பிரபு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

பின்னர் போலீசார் பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்த பிரபுவுக்கு 40 வயதாகியும் திருமணமாகவில்லை. இந்த ஏக்கத்தில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் உடல் அழுகியதை பார்க்கும் போது அவர் சில நாட்களுக்கு முன்பே தற்கொலை முடிவை எடுத்து தூக்கில் தொங்கியிருக்கலாம் என தெரிகிறது.

மேலும் இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்