பண மோசடி வழக்கில் பென்னகோணம் ஊராட்சி மன்ற தலைவர் கைது

பண மோசடி வழக்கில் பென்னகோணம் ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-19 20:03 GMT

மங்களமேடு:

ஊராட்சி மன்ற தலைவர்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த லெப்பைக்குடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் சந்தோஷ்குமார், பெரம்பலூர் மற்றும் சென்னையில் அலுவலகம் அமைத்து 5 சதவீத வட்டி தருவதாக கூறி, சுமார் பல கோடிக்கும் மேலாக ஆயிரக்கணக்கானவர்களிடம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ஒருவருக்கும் வட்டித்தொகை தராததை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர். இதன் அடிப்படையில் சந்தோஷ்குமாரின் மனைவி சிவசங்கரியை சென்னையில் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கைது

இந்த நிலையில் சந்தோஷ்குமாரின் தாயான ஜெயலட்சுமி மீது சுமார் ரூ.5 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக, சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த வினோத் உள்பட 5 பேர் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு ஜெயலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்