அரசு சார்பில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் பிரிவில் கலை போட்டிகள் நடைபெற உள்ளது.;

Update:2026-01-21 17:01 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பள்ளி மாணவ,மாணவியருக்கு அரசின் சார்பில் நடத்தப்படும் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 2025-2026

கலைப் பண்பாட்டு துறையின் தமிழ்நாடு சகவர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 05 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு கலை பயிற்சிகள் அளித்து வருகிறது. சிறார்களிடையே மறைந்துள்ள கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளிலும் 5-8, 09-12, 13-16 ஆகிய வயது பிரிகளில் கலைப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. மேலும் 09-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக 05-08, 09-12, 13-16 ஆகிய வயது பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் 07.02.2026 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் பிரிவில் கலை போட்டிகள் நடைபெற உள்ளது. கலைப் போட்டிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை 600028 யில் நடைபெற உள்ளது போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்களின் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் முகவரி ஆகியவை அடங்கிய விவரம் உடன் கொண்டு வர வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு –

1. பரத நாட்டியம்(செவ்வியல்)

பரத நாட்டியம், குச்சிப்புடி ,மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனம் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறுந்தகடுகள், பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்

2. கிராமிய நடனம்( நாட்டுப்புற கலை )

தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்கள் காண திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. குறுந்தகடுகள், பென்டிரைவ் ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றைப் போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

3. குரலிசை

கர்நாடக இசை பாடல்கள்,தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்படப் பாடல்கள் பிறமொழி பாடல்கள் குழு பாடல்களுக்கு அனுமதி இல்லை. குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை அனுமதிக்கப்படும் .

4. ஓவியம்

40 x 30 செ.மீ அளவுள்ள சவகர் சிறுவர் மன்றத்தால் வழங்கப்படும் ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில் , க்ரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர் மற்றும் ஆயில் கலர், பெயின்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும் .

கூடுதல் விவரங்களுக்கு 044 – 28192152 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்