ஸ்ரீமுஷ்ணம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஸ்ரீமுஷ்ணம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-05-27 18:45 GMT

சேத்தியாத்தோப்பு, 

ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பேரூர் ஊராட்சியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து தரக்கோரி, அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் சேத்தியாத்தோப்பு சாலையில் பேரூர் பஸ் நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்