மின்சாரம், குடிநீர் வசதி கோரி 43 ஆண்டுகளாக போராடும் மலைக்கிராம மக்கள் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

மின்சாரம், குடிநீர் வசதி கோரி 43 ஆண்டுகளாக போராடும் மலைக்கிராம மக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-17 22:21 GMT

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மலை கிராமமான திருப்பணிபுரத்தை சேர்ந்த வசந்தி உள்ளிட்ட கிராம மக்கள் சார்பில் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், "எங்கள் கிராமத்தில் 25 குடும்பங்கள் உள்ளன. எங்கள் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி கடந்த 1979-ம் ஆண்டு மின்சார வாரியத்திடம் மனு கொடுத்தோம்.

வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் மின் கம்பம் நடுவதற்கு வனத்துறை அனுமதி மறுப்பதால் மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. மேலும், குடிநீர் இணைப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்தும், அதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், 'மக்களுக்கான அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை வழங்குவது அரசின் கடமை. மனுதாரர் மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மின் இணைப்பு கேட்டு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை மின்வாரியம் மற்றும் இதர துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பரிசீலித்து மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், குடிநீர் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விவசாய பொருட்களை எடுத்து செல்லும் கிராமத்தினரை வனத்துறையினர் தடுக்கக்கூடாது. இதை மீறும் வனத்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்