முதல்-அமைச்சருக்கு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்கத்தினர் மனு

தீபாவளி போனஸ் குறித்து முதல்-அமைச்சருக்கு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்கத்தினர் மனு அனுப்பி உள்ளனர்.

Update: 2023-10-23 15:29 GMT

மதுரை,

தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், பொது வினியோக திட்டத்தின் கீழ் 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளை நடத்தி வருகிறது. இதில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலக பணியாளர்களுக்கு சம்பளம், போனஸ், பணிக்கால பயன்கள், கடை வாடகை, லாரி வாடகை, மின் கட்டணம் போன்ற செலவினங்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு ஆணையின்படி, கடந்த ஆண்டு தீபாவளி போனஸ் பெறுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10 சதவீதம், ரூ.8,400 போனஸ் வழங்கப்பட்டது. விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு நடப்பாண்டு ரூ.16,800 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். போனஸ் சட்டத்தின்கீழ் வராத கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு கருணைத்தொகையாக ரூ.2400 குறைந்த தொகை வழங்கப்பட்டதினை உயர்த்தி ரூ.8,400 ஆக வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் தங்கு தடையின்றி பெறுவதற்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 முடிய வழங்க வேண்டிய சுமார் ரூ.250 கோடி மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்