புனித வனத்து சின்னப்பர் ஆலய ஆடம்பர தேர் பவனி

கல்பட்டில் உள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

Update: 2023-08-09 18:45 GMT

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற புனித வனத்து சின்னப்பர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டுப்பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டு 122-ம் ஆண்டுப்பெருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பலி நிகழ்ச்சியும், மாலையில் நவநாள் திருப்பலி, தேர் பவனியும் நடைபெற்றது.

ஆடம்பர தேர் பவனி

அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், 8 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், 11 மணி, பகல் 3 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலியும், இரவு 8 மணிக்கு தேவநற்கருணை ஆசிரும் நடந்தது. அதன் பின்னர் 9.30 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதையொட்டி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித வனத்து சின்னப்பர் சொரூபம் அமர்த்தப்பட்டு கல்பட்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர், பவனியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு நன்றி திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்