அய்யஞ்சேரி அருகே புள்ளிமான் மர்மச்சாவு

அய்யஞ்சேரி அருகே ஒரு புள்ளி மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

Update: 2022-06-29 08:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள மதுரை மீனாட்சிபுரம் குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இந்த புள்ளிமான்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வந்து செல்வது வழக்கம், இந்தநிலையில் நேற்று காலை மதுரை மீனாட்சிபுரம் அருகே பிஷப் நகர் பகுதியில் ஒரு புள்ளி மான் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தாம்பரம் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் வனத்துறை ஊழியர்கள் புள்ளி மானின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

மீனாட்சி நகரை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலையில் அருகில் உள்ள காடுகளில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் புள்ளிமான்களை தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் துரத்தி கடித்து விடுகின்றன. இதில் படுகாயமடைந்து மான்கள் இறந்து விடுகிறது. இதனை தடுப்பதற்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் வனத்துறையினர் முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்