கட்டடம் இல்லாத இடத்திற்கு தபால் பெட்டி - மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை தொடரும் சர்ச்சை

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் நுழைவு வாயில் கதவில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-24 09:10 GMT

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. இதனிடையே பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து கூறிய தகவல் தற்போது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் நுழைவு வாயில் கதவில் தபால் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதனை பகிரும் நெட்டிசன்கள், எந்த வித கட்டட பணிகளும் நடைபெறாத இடத்தில் யாருக்கு தபால் வரப்போகிறது? என்றும், எதற்காக அந்த இடத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்