கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-07-30 19:45 GMT

அபிராமி அம்மன் கோவில்

பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதேபோன்று திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பழனி

பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.

பழனி மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெரியாவுடையார் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் மகா பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், வழிபாடு நடந்தது.

நத்தம், கோபால்பட்டி

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவில் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனைகள் நடந்தது. பின்னர் கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி சாமி புறப்பாடு நடந்தது.

கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி கபாலீஸ்வரருக்கு சந்தனம், பூக்கள், மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்