தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை-3 பேர் கைது

பணத்தகராறில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-03-04 00:15 IST

நெகமம்

பணத்தகராறில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்பார்வையாளர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 37). தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக (மேற்பாா்வையாளர்) பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் டிரைவராக பூசாரிபட்டியை சேர்ந்த பூபதி (25), கள்ளிப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த தீனதயாளசாமி (44), திப்பம்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார் (22) ஆகியோர் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ்குமாரிடம் பிரபாகரன் பணம் பெற்று உள்ளார். சம்பவத்தன்று இரவு ஆலாம்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேட்டில் அமர்ந்து பிரபாகரன் மது குடித்து கொண்டு இருந்துள்ளார்.

தாக்குதல்

இதை பார்த்த சந்தோஷ்குமார், பிரபாகரனிடம் மது குடிக்க மட்டும் பணம் உள்ளது. என்னிடம் வாங்கிய பணத்தை மட்டும் திருப்பித்தர முடியவில்லையா என்று கேட்டு உள்ளார். அப்போது பூபதி, தீனதயாளசாமி ஆகியோர் அங்கு வந்துள்ளனர். இதில் 3 பேரும் சேர்ந்து பிரபாகரனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அவர்கள், பிரபாகரனை தாக்கியதோடு அடித்து உதைத்து கீழே தள்ளி உள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தனியார் நிறுவன மேற்பார்வையாளரை அடித்துக் கொலை செய்ததாக பூபதி, தீனதயாளசாமி, சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்