நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள், காவலாளிகள், உதவியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் தூய்மை பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். பழிவாங்கும் நோக்கில் தூய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனம் பணியிடை நீக்கம் செய்து உள்ளது. அதை திரும்ப பெற வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
தூய்மை பணியாளர்களை இதர பணிகளை செய்ய வற்புறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் நீடித்தது.
தூய்மை பணியாளர்களின் தர்ணா போராட்டத்தால், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.