ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

வாணியம்பாடி அருகே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆகிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-24 18:48 GMT

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆகிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர். அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கூட்டு சாலையில் அதே கிராமத்தை சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்திற்கு பிரதான போக்குவரத்து சாலையாக உள்ள கூட்டு சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் பள்ளி வாகனங்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இதனால் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்ற பல முறை நோட்டீஸ் மட்டும் நெடுஞ்சாலை துறையினர் வழங்கி உள்ளனர். ஆனால் இது வரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

உண்ணாவிரத போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தும்பேரி கூட்டு சாலையில் ஆக்கிரமிப்பிற்கு துணை போகும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தாசில்தார் சம்பத் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்