இளம்பெண் பாலியல் பலாத்காரம்

கூடலூரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-14 18:45 GMT

கூடலூர், 

கூடலூரில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாலியல் பலாத்காரம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். ரத்தினகுமார் 20 வயது இளம்பெண்ணிடம் நட்புடன் பழகி வந்தார்.

இதனால் அந்த இளம்பெண்ணும், அவரது குடும்பத்தினருடன் சகஜமாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் இளம்பெண்ணிடம் நட்புடன் பழகி வந்த ரத்தினகுமாரின் மனதில் வஞ்சகம் தோன்றியது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் தனது வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த ரத்தினகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

தொழிலாளி கைது

இதேபோல் தனியாக இருக்கும் சமயத்தில் இளம்பெண்ணிடம் வரம்பு மீறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் கூறி அழுது உள்ளார். இதுகுறித்து இளம்பெண் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து ரத்தினகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ரத்தினகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, சமுதாயத்தில் பெண்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் பாலியல் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்