காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி

காட்டு யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பலி;

Update:2023-05-18 00:15 IST

துடியலூர்

கோவை அருகே காட்டுயானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆராய்ச்சி மாணவர்

ராஜஸ்தான் மாநிலம் சவாய் மடபூரை சேர்ந்தவர் கமல் ஸ்ரீமல். இவரது மகன் விஷால் ஸ்ரீமல் (வயது 23).

இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வனவியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் விஷால் ஸ்ரீமல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவையை அடுத்த ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார். அவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி, விஞ்ஞானியான ரித்திகா கலை என்பவரிடம் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வந்தார்.

யானை தூக்கி வீசியது

நேற்று முன்தினம் இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். பின்னர் அங்குள்ள உணவு கூடத்தில் இருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் விஷால் ஸ்ரீமல் அவரது நண்பர்கள் உடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால் எதிர்பாராத விதமாக விஷால் ஸ்ரீமல் யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை அவரை தூக்கி வீசியதுடன் காலால் மிதித்தது. இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

சாவு

பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஷால் ஸ்ரீமலை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் புட்டத்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி சேர்ந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவிலே அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமன் சிகிச்சை பலனின்றி பரிதாப உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர்கள் கோவை வந்து அவரது உடலை பெற்றுக்கொண்டனர். கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்