வருவாய் துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனி தாசில்தார் மனோஜ் முனியன் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தலையீட்டால், அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அங்கு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். வருவாய் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சுப்பு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. அவர்கள் கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.