அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி 6 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2¾ கோடி மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-09-23 21:53 GMT

சேலம்,

அரசு வேலை

தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் அரவிந்த்குமார் (வயது 30). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

என்னுடைய தந்தைக்கு வியாபார ரீதியாக சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த நடராஜன் என்பவர் பழக்கமானவர். பின்னர் அவர் சசிகுமார் என்பவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று தங்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து சசிகுமார் தன்னிடம், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

ரூ.2¾ கோடி மோசடி

இதை நம்பிய நான் உள்பட பலர் அவரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்தோம். அதாவது கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தவணைகளாக ரூ.2 கோடியே 83 லட்சம் அவரிடம் கொடுத்தோம். ஆனால் சசிகுமார் எங்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றினார். அதைத்தொடர்ந்து அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அப்போது எங்களுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட சசிகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சசிகுமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்