ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

Update: 2024-05-07 11:48 GMT

சென்னை,

கடந்த மாதம் 6-ந்தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், தமிழக பா.ஜனதா துணைத்தலைவரும், நெல்லை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

இந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26-ந்தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தங்கள் வசம் உள்ள இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பிரமுகர் கோவர்த்தனின் வீடு, ஓட்டலில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்