படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

Update: 2023-05-05 18:45 GMT

கடலூர்

உதவித்தொகை

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.4.2023 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

10-ம் வகுப்பு (தோல்வி), 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத்தொடர்ந்து புதுப்பித்து 1.04.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

ஆண்டு வருமானம்

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி. நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 1.4.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றவராகவோ அல்லது பெறுபவராகவோ இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்