படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-07 19:12 GMT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உதவித்தொகை

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் யைத்தில் வருகிற 1.10.2023 அன்று தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகள் உடையவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருகிற 31.12.2023 அன்று வரை வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வருகிற 31.12.2023 அன்று 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு தோல்விக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 என மாதந்தோறும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10-ம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூபாய் ஆயிரம் என வழங்கப்படுகிறது.

உதவித்தொகை பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். மேலும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களின் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் வருகிற 30.11.2023-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் கள்ளக்குறிச்சி 18/63, நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்