வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம்; தீவிர கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
சட்டமன்ற தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.;
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வீடுதோறும் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, நேற்று டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த அக்டோபர் 27-ந்தேதி துவங்கியது. முதல் கட்டமாக, வீடு வீடாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கப்பட்டு, வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்புக்கு பின், தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த அக்டோபர், 27-ந்தேதியின்படி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 6 கோடியே 41 லட்சத்து 14,587. தற்போது வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 5 கோடியே 43 லட்சத்து 76,755 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் கணக்கெடுப்பு பணியின்போது, வாக்குச்சாவடி அலுவலர்கள் குறைந்தபட்சம் மூன்று முறை, வீடுதோறும் சென்று விசாரணை மேற்கொண்டனர் என்றும் அதன் அடிப்படையில், இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இறந்தவர்கள் 26 லட்சத்து 94,672; இடம் பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 66 லட்சத்து 44,881; ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருந்தவர்கள் 3 லட்சத்து 39,278 பேர் என, மொத்தம் 97 லட்சத்து 37,831 பேர், பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்தது போலவே தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் ஏற்படும் என்று முன்பே நாம் எச்சரிக்கை செய்துததுதான் நடந்திருக்கிறது. இதனை எதிர்பார்த்துதான் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. சார்பில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஐயப்பாட்டை எழுப்புகிறது. தகுதி உள்ள வாக்காளர்கள் பெயர், பட்டியலில் விடுபட்டு இருந்தால் உடனடியாக படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை இருப்பின் படிவம் 7, முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 ஆகியவற்றை ஜனவரி 18-ந்தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் .
சட்டமன்ற தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து தீவிரமாக கள ஆய்வு செய்யும் கடமையை ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.