தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,845 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Update: 2023-05-13 18:45 GMT

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் -2 நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரபாகர், கூடுதல் சார்பு நீதிபதி-II அன்வர் சதாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

ரூ.17½ கோடி வசூல்

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-I வனஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-III ரகோத்தமன், மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் துரை பிரேம்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம் மற்றும் வக்கீல்கள், போலீஸ் நிலைய அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதி மன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 5,327 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் மொத்தம் 1,845 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.17 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 201 வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்