மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர லஞ்சம் கேட்ட எஸ்.ஐ., கைது...!

கடலூரில் மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர கணவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-14 12:25 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் தனது மனைவி ரஞ்சினியிடம் இருந்து விவாகரத்து கடிதம் பெற்றுத்தருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அய்யப்பனிடம் விசாரணை நடத்திய குள்ளஞ்சாவடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுந்தரம், வழக்கு சம்மந்தமாக மனைவியிடம் விவாகரத்து கடிதம் பெற்றுத்தர தனக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்யப்பன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் ரசாயன பொடி தடவிய 5 ஆயிரம் ரூபாயை அவரிடம் இருந்து வாங்கிய பாலசுந்தரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சியாம் சுந்தர் என்பவர் விசாரணைக்கு வந்தவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது லஞ்ச வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைதான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்