பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஏற்பாடுகள்

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-01-24 18:45 GMT

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து பாதயாத்திரையாக பழனிக்கு நடந்து செல்வது வழக்கம். அவ்வாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி உள்ளிட்ட கோவில்களில் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்த பக்தர்களுக்கு பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் பரம்பரை அறங்காவலர்கள் தண்ணீர்மலை செட்டியார், சுவாமிநாதன் செட்டியார் ஆகியோர் கூறியதாவது:- அய்யப்ப பக்தர்கள் மற்றும் பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களின் தரிசனத்திற்காக பகல் நேரம் முழுவதும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி தைப்பூசத்திருவிழா வருவதால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்ல உள்ளனர். இவர்களுக்காக கோவிலில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்