தடகள வீராங்கனைக்கு விளையாட்டு உபகரணம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில தடகள வீராங்கனைக்கு விளையாட்டு உபகரணங்களை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.

Update: 2023-09-04 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 339 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 32 பேரிடம் மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். பின்னர் பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தில் கடந்த ஜீலை மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்சிப் போட்டியில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி சுதேஷ்னாவை கலெக்டர் பாராட்டினார். 5 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளுடன் வறுமை தாயுடன் வாழும் தாகம் தீர்த்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியும், தடகள வீராங்கனையுமான கவுசல்யாவின் வறுமை நிலையை அறிந்த கலெக்டர் மாணவிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் ஆகியவற்றினை வழங்கியதோடு, விளையாட்டு தொடர்பான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்து தரப்படும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லி ஏஞ்சல், முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்