பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-01-18 08:48 GMT

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

வடகிழக்கு பருவமழை மற்றும் மான்டஸ் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 8-ந்தேதி மதகுகள் வழியாக உபரிநீர் கொசஸ்தலை ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வினாடிக்கு 290 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நீர்மட்டம் 34.64 அடி ஆக பதிவாகியது. 3.038 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்