பரமத்திவேலூர் அருகேபஸ்சில் இருந்து குதித்து வடமாநில தொழிலாளி தற்கொலை

Update: 2023-09-04 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே விரைவு பஸ்சில் இருந்து குதித்து வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வடமாநில தொழிலாளர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுமித் குமார். இவர் மதுரையில் உள்ள ஒரு கட்டிட காண்டிராக்டரிடம் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சுமித்குமார் ஜார்கண்ட் சென்று 18 பேரை வேலைக்கு அழைத்து கொண்டு நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து அரசு விரைவு பஸ்சில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். நாமக்கல்- கரூர் பைபாஸ் சாலையில் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு மேம்பாலத்தில் சென்றபோது வடமாநில தொழிலாளர்களில் ஒருவர் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் சத்தம்போட்டு பஸ்சை நிறுத்தினர்.

அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் 18 பேரையும் கீழே இறக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பரமத்திவேலூர் போலீசார் கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் ஜார்க்கண்ட் மாநிலம் சார்பார்வா பாலமு மணிகா ரப்டா பகுதியை சேர்ந்த சார்க் புய்யான் (வயது 52) என்பது தெரியவந்தது. இதுகுறித்து அரசு பஸ் டிரைவரான திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் (49), கண்டக்டர் மதுரை கூடல்நகரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (42) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான சார்க் புய்யான் வேலைக்கு வர விருப்பமில்லை இருந்ததாகவும், அவருடைய குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி அவரை வேலைக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவர் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்