பவானிசாகர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை; மனைவியை பிரிந்த துயரத்தில் விபரீத முடிவு

பவானிசாகர் அருகே மனைவியை பிரிந்த துயரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-07 20:55 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அருகே மனைவியை பிரிந்த துயரத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியை பிரிந்தார்

சத்தியமங்கலம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மோகன் (வயது40). இவருடைய மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. மோகன் தனது மனைவியுடன் நம்பியூர் அருகே உள்ள சாவக்காட்டுபாளையத்தில் குடியிருந்து வந்தார்.

அவருக்கு மது குடிப்பழக்கம் உண்டு. இதை மகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை விட்டு அவர் பிரிந்தார். அதைத்தொடர்ந்து பவானிசாகர் அருகே தொட்டம்பாளையத்தில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தங்கி நெசவுத் தொழில் செய்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியை பிரிந்ததால் மோகன் மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். மனமுடைந்த நிலையில் காணப்பட்டு் வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை வழக்கம்போல் அவர் நெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை தறிப்பட்டறை உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது அங்கு உள்ள விட்டத்தில் கயிற்றில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

உடனே இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூர்ண சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்