கடலூரில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது

கடலூரில், நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-10-26 19:00 GMT

கடலூர் கம்மியம்பேட்டை பராசக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் மகன் மோகன் (வயது 36). கொத்தனார். இவருடைய மனைவி சத்யா (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மனைவி சத்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மோகன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சத்யா கடந்த 3 மாதமாக கம்மியம்பேட்டை நேதாஜி தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மோகன், சத்யாவின் தாய் வீட்டுக்கு சென்று அங்கிருந்த அவரிடம் தகராறு செய்து, ஆபாசமாக பேசி உள்ளார். மேலும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி மிரட்டி சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த சத்யாவைஅக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி சத்யா கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்