யானைகள் கணக்கெடுப்பு பணி

Update: 2023-05-16 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள

செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

யானைகள் கணக்கெடுப்பு

ஓசூர் வனக்கோட்டத்தில் காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்களில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. குறிப்பாக ஊடேதுர்க்கம், சானமாவு, நொகனூர், அய்யூர், ஜவளகிரி, பனை, உளிபண்டா, மகராஜகடை, வேப்பனப்பள்ளி, உடுபுராணி, நாட்ராம்பாளையம், பிலிகுண்டுலு, உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஅள்ளி பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் ஓசூர் வனக்கோட்டத்தில் மொத்தம் 499 யானைகள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று (புதன்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

வாட்ஸ்-அப் குழு

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள 40 வனக்காவல் சுற்று பீட்டுகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வந்த உயிரியலாளர் சக்திவேல் மூலம் ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில் உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்களுக்கு ஓசூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் கணக்கெடுப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.மேலும் பணியில் ஈடுபடுபவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு வழிகாட்ட ஏதுவாக வாட்ஸ்-அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. இந்த குழுவினர் இன்று முதல் யானைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்