தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழாவில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.;

Update:2022-08-19 18:32 IST

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழாவில் பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

தேய்பிறை அஷ்டமி விழா

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு 108 வகை நறுமண பொருட்கள் மற்றும் பல்வேறு பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு 1,008 ஆகம பூஜைகள், வேத பாராயணம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடந்தது.

பின்னர் சாமிக்கு உபகார பூஜைகள், ராஜ அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

யாகம்

இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது. 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்திலேயே சாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்