பள்ளிபாளையம், வெண்ணந்தூர்சிவன் கோவில்களில் ஆருத்ர தரிசன விழா

Update: 2023-01-06 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம், வெண்ணந்தூரில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ர தரிசன விழா நடந்தது.

காசி விஸ்வேஸ்வரர் கோவில்

பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வேஸ்வரர் விசாலாட்சி கோவிலில் ஆருத்ர தரிசன விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு காசி விஸ்வேஸ்வரர், விசாலாட்சி சாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.

மேலும் தேன், இளநீர், பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, கறும்பு சாறு உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தன. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காசி விஸ்வேஸ்வரர், விசாலாட்சி கோவிலில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விஸ்வநாத ஈஸ்வரர் கோவில்

இதேபோல் வெண்ணந்தூரில் உள்ள விஸ்வநாத ஈஸ்வரர் கோவிலில் ஆருத்ர தரிசனம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் சாமிக்கு நடராஜர் அலங்காரத்தில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்