டெமு ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்
அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி டெமு ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வேதாரண்யம்:
அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி டெமு ரெயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீட்டர்கேஜ் பாதை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட மீட்டர் கேஜ் பாதையில் ரெயில் போக்குவரத்து நடைபெற்றது. இந்த மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரெயில் பாதை ரூ.294 கோடியில் கடந்த 20 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
அதன் பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை டெமு ரெயில் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் திருச்சிக்கு நேரடியாக இந்த டெமு ரெயில் இயக்கப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை விடப்படுகிறது. இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் ரெயில் இயக்கப்படுகிறது.
முன்பு இருந்தது போல...
தற்போது அதிக வருவாய் இன்றி பெயரளவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அகஸ்தியன்பள்ளி, வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குரவப்புலம், கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் மட்டுமே இந்த ரெயில் நின்று செல்கிறது.
முக்கியமாக முன்பு இருந்தது போல அகஸ்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து செல்லக்கூடிய நேரடி ரெயிலும் இணைக்கப்பட்டால் மட்டுமே ரெயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என ரெயில் உபயோகிப்பாளர்கள் தெரிவித்தனர். எனவே 20 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்படும் ரெயிலை பொதுமக்கள் தொலைதூரம் செல்வதற்கு பயன்படுத்தும் வசதியாக இயக்க, ரெயில்வே துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.