அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது

மஞ்சூர் பஜாரில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. இதை வனத்துறையினர் மீட்டு முக்குருத்தி வனப்பகுதியில் விட்டனர்.

Update: 2022-11-23 18:45 GMT

மஞ்சூர்

மஞ்சூர் பஜாரில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. இதை வனத்துறையினர் மீட்டு முக்குருத்தி வனப்பகுதியில் விட்டனர்.

கரடி அட்டகாசம்

ஊட்டி அருகே மஞ்சுர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கரடி ஒன்று நடமாடி வந்தது. பகல் நேரங்களில் அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் பதுங்கி இருக்கும் இந்த கரடி, இரவு நேரத்தில் உணவு தேடி கடை வீதிகளில் புகுந்து விடுகிறது. கடந்த 2 வாரத்திற்கு முன்னர் ஒரு கடைக்குள் புகுந்து முட்டைகளை குடித்து விட்டு சென்றது.

இதையடுத்து கடந்த வாரம் இரவு நேரத்தில் மஞ்சூர் பஜாருக்குள் வந்த கரடி, அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. அங்குள்ள அங்கன்வாடி மையத்தை ஒட்டி அமைந்துள்ள சமையல் அறையின் 2 பக்க கதவுகளையும் உடைத்து உள்ளே சென்றது. இதன் பின்னர் அங்கு இருந்த சமையல் எண்ணெயை குடித்து விட்டு பொருட்களை சூறையாடி அட்டகாசம் செய்துவிட்டு தப்பி சென்றது.

கூண்டு வைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டத்தில் கரடி தாக்கியதில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அதுபோல் இங்கு சம்பவம் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் விரைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் குந்தா வனச்சரகம் தாய்சோலை பிரிவு பிக்கட்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்சூர் பஜார் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.

வனப்பகுதியில் விட்டனர்

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த கரடி கூண்டில் சிக்கியது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி சச்சின் போஸ்டில் துக்காரா உத்தரவின் பேரில் குந்தா வன சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் அந்த கரடியை வாகனத்தில் ஏற்றி சென்று முக்குருத்தி தேசிய பூங்கா பங்கித் தபால் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இதையடுத்து அந்த கரடி வனப்பகுதியில் பாய்ந்து ஓடி மறைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்