மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்

மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்

Update: 2022-08-08 14:57 GMT

வெளிப்பாளையம்

மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என நாகையில், பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டி

நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முல்லை பெரியார் அணையை அரசு திறந்ததால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

இதை காரணம் காட்டி அ.தி.மு.க. போராட்டம் நடத்தினால் அ.தி.மு.க.வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென் மாவட்டங்களில் போட்டி போராட்டம் நடத்தும்.

இறக்குமதி செய்ய வேண்டும்

நாடு முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தேவையான உரத்தை மத்திய அரசு உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும். கேரளாவில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது. அதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. எனவே மாற்றுத்திட்டத்தை கடைப்பிடித்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முடிைவ கைவிட வேண்டும்

குறுவை நெற்பயிருக்கு காப்பீடு இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு நிறுவனங்களே பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் மாரிமுத்து உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்