அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை வழங்க வேண்டும்

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.;

Update:2023-07-16 00:45 IST

கோவை

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


உரிமைத்தொகை


நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்கது. அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான். தேர்தலுக்கு முன்பு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து தி.மு.க. வெற்றி பெற்றது.


ஆனால் இப்போது தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. மேலும் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 கட்டாயம் வழங்க வேண்டும்.


சுற்றுப்பயணம்


விஜயகாந்த் நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறார். அவர், முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் சந்திப்பார். தே.மு.தி.க.வை பொறுத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களது உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது.


இதற்கு அடுத்து செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தேர்தல் கூட்டணி


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும். அந்த முடிவை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார். மக்கள் எந்த கூட்டணி யை ஏற்று கொள்கிறார்கள், யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள்? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தற்போது எனது இளைய மகனின் அடுத்த படத்திற்கான பூஜைக்காக வந்துள்ளேன். அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியா விலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்