50 சதவீத மானியத்தில் பாரம்பரிய விதைகள்

மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-11 18:45 GMT

50 சதவீத மானியம்

சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- பாரம்பரிய நெல் ரகங்கள் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசால் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள் வினியோக திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, கருங்குருவை, செங்கல்பட்டு சிறுமணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நெல் விதைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

ஏக்கருக்கு 10 கிலோ

மொத்த விதை அளவில் 20 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை மட்டும் வழங்கப்படும். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் பட்டா, சிட்டா, மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி தேவையான விதைகளை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்