லாரிகள் மோதல்; டிரைவர்கள் படுகாயம்

நாலாட்டின்புத்தூர் அருகே மினி லாரி, கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-05 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே மினி லாரி, கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காய்கறி லாரி

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேலத்தில் இருந்து நெல்லைக்கு காய்கறி ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சத்தியமங்கலம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சை மகன் தினேஷ் (வயது 20) என்பவர் ஓட்டி சென்றார்.

மோதல்

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள இடைசெவல் அருகே லாரி சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரியானது மினி லாரியை முந்த முயன்றது.

எதிர்பாராதவிதமாக மினி லாரி மீது கன்டெய்னர் லாரி மோதியதில் விபத்திற்குள்ளாகி கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்தது.

காய்கறி ஏற்றி வந்த மினி லாரியும் பலத்த சேதமடைந்தது. இதில் மினி லாரி டிரைவர் தினேசு க்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே போல் கண்டெய்னர் லாரி டிரைவர் பீகார் மாநிலம் தர்பஸ்கா பகுதியை சேர்ந்த தயாப் (42) என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நடந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்