இருசக்கர வாகனம் மரத்தில் மோதி லாரி டிரைவர் பலி

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி லாரி டிரைவர் பலியானார்.

Update: 2023-09-18 18:45 GMT

திருப்புவனம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு ஊருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.

மடப்புரம் விலக்கு அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வரும்போது, இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மரத்தில் மோதியது.

இதில் குமரவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குமரவேலை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து குமரவேல் மனைவி அமலா கொடுத்த புகாரின் பேரில், பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்