கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-06-16 00:15 IST

சாயல்குடி,

கடலாடி ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஊராட்சி அலுவலகத்தை தனிச்சியம் கிராமத்தில் புதியதாக கட்டி வருகின்றனர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி. கிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திலேயே ஊராட்சி அலுவலகம் செயல்பட வேண்டுமென வலியுறுத்தி நேற்று வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மறியலில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர். தகவல் அறிந்த சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் வாலிநோக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் கிராம பொதுமக்கள் டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படுத்த வேண்டுமென பலமுறை மாவட்ட கலெக்டர், அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் முடிவு எட்டப்படவில்லை. ஆகையால் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவதை போலீசார் தடுத்ததால் அவர்கள் 3 மணி நேரம் வாலிநோக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்பு இன்ஸ்பெக்டர் முருகதாசன் பொதுமக்களிடம் அரசு அலுவலர்களிடம் 3 தினங்களில் தாங்கள் கொடுத்த மனுவிற்கு விளக்கம் அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்