'நாம் ஆங்கிலத்திற்கு அடிமையாகி இருப்பதை மாற்ற வேண்டும்' கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

‘நாம் ஆங்கிலத்திற்கு அடிமையாகி இருப்பதை மாற்ற வேண்டும்’ என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பேசினார்.

Update: 2023-02-22 21:05 GMT

சிதம்பரம்,

மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரத்தில் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

உங்கள் அனைவருக்கும் தெரியும் தில்லை நடராஜர், ஆதிகடவுளும், முதன்மையான கடவுளும் ஆவார். நமது திருநாட்டின் சனாதன தர்மம் தோன்றி, பல வித உணர்வுகளை தோற்றுவித்துள்ளது. பஞ்ச பூதங்களும், தமிழகத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகம் ஆன்மிக தலைநகரமாக விளங்குகிறது. புவிஈர்ப்பு விசையின் மைய தலமாக சிதம்பரமும், அதில் உள்ள தமிழ்நாடும் விளங்குகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ரிஷிகளும், முனிவர்களும், மக்கள் எவ்வாறு ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும். பன்முக தன்மையை எவ்வாறு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு மரத்தில் லட்சக்கணக்கான இலைகள், கனிகள் இருக்கும். ஆனால் இரண்டு இலைகளோ, இரண்டு கனிகளோ ஒரே மாதிரி அமைவதில்லை. அதேபோன்று தான் பொதுமக்களாகிய நாமும் பல்வேறு உணர்வுகளும், கட்டமைப்பு இருந்தாலும் ஒரே தேசத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வை முன்னோர்கள் நமக்கு ஊட்டி சென்றுள்ளனர்.

முதன்மை நாடாக விளங்கும்

இந்தியாவில் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதார மந்த நிலை நிலவும் போது, இந்தியா மட்டும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் இன்று, இந்தியாவில் அனைத்து பகுதிகளையும் ஒரு சேர பார்க்கும் பிரதமரை பெற்றுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நமது பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்பதை மற்ற நாடுகள் கூர்ந்து கவனிக்கின்றன.

அடிமையாக இருக்கிறோம்

நம் நாடு இன்று உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. நாம் ஆங்கிலத்திற்கு பல காலமாக அடிமையாக இருக்கிறோம். இதை மாற்ற வேண்டும். நமது சங்க இலக்கியங்களான திருக்குறள், திருமுறை, திவ்ய பிரபந்தம் ஞானத்தை கொண்டது. நமது குழந்தைகளை அதை படிக்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

அதைத்தொடர்ந்து கவர்னர் ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் அமர்ந்து பரத நாட்டியத்தை கண்டு ரசித்தார். தொடர்ந்து, நாட்டிய கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை அவர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்