பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 7 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

Update: 2022-10-10 18:45 GMT

கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 7 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், முதியோர் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 273 பேர் மனுக்களை கொடுத்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து 3 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி தேசிய உதவித்தொகை மாதம் தலா ரூ.1,000 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என மொத்தம் ரூ.36 ஆயிரத்திற்கான உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பணிக்காலத்தில் மரணமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் முனிரத்தினம், ஜெய்சங்கர், கிருஷ்ணன், ராஜமாணிக்கம் ஆகிய 4 பேரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.1 கோடிக்கான காசோலையை அவர் வழங்கினார். கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்