வெண்பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையம் தொடக்க விழா

Update: 2022-09-01 16:27 GMT


உடுமலையையடுத்த மானுப்பட்டியில் வெண்பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையம் தொடக்க விழா நடைபெற்றது.

இளம் புழுக்கள்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெண்பட்டு உற்பத்தியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த பகுதியின் தட்ப வெப்பம் வெண்பட்டு உற்பத்திக்கு சாதகமாக இருப்பதால் இங்கு உற்பத்தியாகும் வெண்பட்டுக் கூடுகள் சிறந்த தரத்தில் உள்ளது.வெண்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள் இளம்புழு வளர்ப்பு மையங்களின் மூலம் இளம்புழுக்களை வாங்கி, வளர்த்து வெண்பட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.தரமான வெண்பட்டு உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள முட்டைகளை இளம்புழு உற்பத்தி மையத்தினர் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மையங்களிலிருந்து பெற்று வந்தனர்.இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது மட்டுமல்லாமல் முட்டைகளின் தரம் குறித்து சில வேளைகளில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகம் முழுவதும்

இதனையடுத்து உடுமலை பகுதியிலேயே தரமான முட்டைகளை உற்பத்தி செய்யும் வகையில், மத்திய அரசின் அங்கீகாரத்துடன் மானுப்பட்டியில் வெண்பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த மையத்தின் மூலம் ஒரு மாதத்துக்கு 2 லட்சம் முட்டைத் தொகுதிகள் வரை உற்பத்தி செய்ய முடியும்.இதனை தமிழகம்முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் இளம்புழு வளர்ப்பு மையங்களுக்கும் விநியோகிக்கலாம். இந்த முட்டை உற்பத்தி மையத்தை பெங்களூரிலுள்ள மத்திய பட்டு வாரிய சி.இ.ஓ. மற்றும் உறுப்பினர் செயலர் ரஜித் ரஞ்சன் ஒகாண்டியர் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் இந்த மையம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பட்டு விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி மந்திரமூர்த்தி, தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை மண்டல இணை இயக்குனர் முருகன், சேலம் மண்டல பட்டு வளர்ப்பு ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி தஹிராபீவி, உடுமலைப்பேட்டை ஆராய்ச்சி விரிவாக்க மைய விஞ்ஞானி சமுத்திரவேலு, தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை உடுமலை உதவி இயக்குனர் மனிஷா, ஓய்வு பெற்ற மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி செல்வராஜு மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.பாலசுப்பிரமணியன் மற்றும் சுப்பிரமணியன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்