விருத்தாசலம் அருகே பரபரப்பு கத்தியால் குத்தி மனைவி கொலை கொத்தனார் போலீசில் சரண்

விருத்தாசலம் அருகே கத்தியால் குத்தி மனைவியை கொத்தனார் கொலை செய்துவிட்டு, போலீசில் சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2022-06-25 22:20 IST


கம்மாபுரம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆவினங்குடியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் நாகராஜன் (வயது 32). கொத்தனார். இவரது மனைவி ராஜலட்சுமி (25). திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

இவர்கள் தற்போது, ராஜலட்சுமியின் சொந்த ஊரான கம்மாபுரத்தில் வெள்ளாளர் தெருவில் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் ராஜலட்சுமி சமையலராக பணிபுரிந்து வந்தார்.

இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக, இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு, அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

குத்திக்கொலை

நேற்று, தம்பதியினரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜன், ராஜலட்சுமியை அவரது தலை, பின் கழுத்து பகுயில் கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன், கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் நாகராஜன் சரண் அடைந்தார்.

போலீஸ் விசாரணை

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று, ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து கம்மாபுரம் போலீசார் தொடர்ந்து, நாகராஜனிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்