ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் ரெத்தினசாமி (வயது 44), தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரெத்தினசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி, பிள்ளைகளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ரெத்தினசாமி பகலில் மது குடித்து விட்டு தூங்க செல்வதாக கூறிவிட்டு டீ கடை நடத்த கட்டியுள்ள அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.
மதியம் கதவை ராசாத்தி தட்டினார். ஆனால் திறக்கவில்லை. உடனே அவர் கதவில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே பார்த்தார். அப்போது அங்கு ரெத்தினசாமி கம்பியில் தூக்கில் தொங்கிகொண்டிருந்தார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் கீதா, பிரான்சிஸ் ஆகியோர் விரைந்து வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்த ரெத்தினசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.