வரலட்சுமி விரதத்தையொட்டி பெண்கள் வழிபாடு

வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2023-08-25 18:45 GMT

வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் பெண்கள் வழிபாடு நடத்தினர்.

வரலட்சுமி விரதம்

நித்திய சுமங்கலி என அழைக்கப்படும் மகாலட்சுமியை ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 2-ம் வெள்ளி அல்லது ஆவணி பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் வணங்கி வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் அல்லது 2 பவுர்ணமிகள் வந்தால் வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசைகள் வந்ததால் பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமையான நேற்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. கணவனின் ஆயுள் அதிகரித்து மாங்கல்யத்துடன் திகழ வேண்டும் என்பதற்காக மகாலட்சுமியை வேண்டி விரதம் இருந்து திருணமான சுமங்கலி பெண்களை அழைத்து மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்கி விரதத்தை முடிப்பார்கள்.

பெண்கள் விரதம்

இதன்படி நேற்று நடைபெற்ற வரலட்சுமி விரத நிகழ்ச்சியையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ராமநாதபுரத்தில் மல்லம்மாள் காளி கோவில், பெரிய மாரியம்மன்கோவில், ருத்ரமாதேவி மற்றும் உதிரகாளி அம்மன்கோவில், பிள்ளை காளியம்மன் கோவில், கருமாரியம்மன்கோவில், வெட்டுடையாள் காளி கோவில், ராஜமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வரலட்சுமி விரதம் நடந்தது.

இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பெண்கள் கோவில்களில் விளக்கேற்றி சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, வளையல், ரவிக்கை துணி உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். இந்நிகழ்ச்சியையொட்டி அம்மன், காளி கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதுதவிர வீடுகளிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்