டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் விசா ரத்து: ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை

மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க ஜோகோவிச் தவறிவிட்டதால், விசா ரத்து செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறியது.

Update: 2022-01-06 03:09 GMT
கோப்புப்படம்
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. 

இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டிருந்தனர். இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாரா? இல்லையா? என்பதை தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வரும் ‘நம்பர் ஒன்’ வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்தது.

ஏற்கெனவே பல முன்னணி வீரர்கள் ஒதுங்கிய நிலையில், ஜோகோவிச்சும் பின்வாங்கினால் போட்டி களைஇழந்து விடும் என்பதால் அவரை ஆட வைக்க அவருக்கு மட்டும் மருத்துவ விதிவிலக்கு அளிக்கப்படுவதாக முதலில் போட்டி அமைப்பாளர்களால் கூறப்பட்டது.

இந்த நிலையில், போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

விசா ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக செர்பியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசு கூறுகையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நோவாக் ஜோகோவிச் தவறிவிட்டார். அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.

மேலும் செய்திகள்