சூடானில் தொழிற்சாலையில் தீ விபத்து; இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி
சூடான் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 23 பேர் பலியாகினர்.
கார்டம்,
சூடான் நாட்டின் கார்டம் நகரில் மட்பாண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் எரிவாயு நிரம்பிய லாரி ஒன்று ஆலையில் திடீரென வெடித்து சிதறியது.
இதில் சிக்கி 23க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி அந்நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழிலாளர்கள் உள்பட பலர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர் என தகவல்கள் கிடைத்து உள்ளன என தெரிவித்துள்ளது.
இந்த ஆலையில் தேவையான பாதுகாப்பு சாதனங்கள் இல்லை. வெடிக்க கூடிய பொருட்கள் முறையற்ற வகையில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் தீ பரவி உள்ளது என சூடான் அரசு தெரிவித்து உள்ளது. இதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.